கட்டுவிரியன் பாம்பால் தவெக நிர்வாகி இறந்தாரே! பாம்பை கண்டால் படையே நடுங்குவது ஏன்? டாக்டர் விளக்கம்
சென்னை:
பாம்பு கடித்தால் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது. பொதுவாக பாம்பு கடிக்கும் போது நாம் செய்யக் கூடிய தவறுகள் என்னென்ன என்பதை சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கட்டுவிரியன் பாம்பு கடித்து சகோதரர் மரணமடைந்திருப்பது வருத்தம் தரும் செய்தி
அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தார் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைக் கூறிக் கொண்டு
பாம்புக் கடி குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்களைக் காண்போம்.
வருடத்தின் மாதங்களில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 80% பாம்புக்கடி நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. இதில் பெரும்பான்மை நிகழ்வுகள் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள கிராமங்களிலேயே நிகழ்கின்றன. கடிபட்டவர்களில் 14% பேருக்கு கடித்தது இன்னதென தெரியாது. இதை UNKNOWN BITE என்று கூறுவோம்.
மருத்துவர்களைப் பொருத்தமட்டில் கடித்தது இன்னதெனத் தெரியாதவரை அதை பாம்புக்கடியாக எண்ணியே முதலுதவி மற்றும் தேவையான பரிசோதனைகள் செய்வோம். வயது வரம்பில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே அதிகமாக பாம்புக்கடிக்கு உள்ளாகிறார்கள்.
நிகழும் பாம்புகடியில் 67% கால் மற்றும் பாதங்களில் கடிக்கின்றன. வெறும் காலில் நடப்பவர்களையே பெரும்பாலும் கடிக்கின்றன. 40% பாம்புக்கடி நிகழ்வுகள் மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணிக்குள் நிகழ்கின்றன.
59.2% பாம்புக்கடி நிகழ்வுகள் வீட்டுக்குள்ளும் வீட்டை சுற்றியும் உள்ள இடங்களில் நிகழ்கின்றன.