சிதம்பர ரகசியம்...நடராஜர் ஆலயத்தின் பஞ்சசபைகள் - கனகசபைக்கு இத்தனை சிறப்புகளா?
சிதம்பரம் தலத்தில் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன.
கனகசபை மீதேரி சிதம்பர ரகசியத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. சிதம்பரம் தலத்தில் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன. பஞ்சசபைகளின் சிறப்புகளையும் பொன்னம்பலமாக திகழும் கனகசபையின் முக்கியத்துவத்தையும் பார்க்கலாம்.
சிதம்பரம் கோவில் கட்டிட அமைப்பு அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும். வாஸ்து, ஆகம விதிகள் பிறழாது நெறிப்பட அமைந்த கோவில் இது. குறிப்பாக, சித்சபையானது மரத்தால் நமது உடல் அமைப்பை அப்படியே ஒத்துள்ளது. சித்சபை மேல் 21600 பொன் ஓடுகள் பொருத்தி, 72000 ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.
ஒரு மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கை 72000 அவன் ஒரு நாளைக்கு விடும் சுவாச காற்றின் எண்ணிக்கை 21600. மேல் உள்ள 9 கலசங்கள், 9 சக்திகள், நவரத்தினங்கள், நவகிரகங்கள் ஆகியவற்றை குறிக்கும். 9 வெளிவாசல்கள் மனிதனின் 9 துவாரங்களை குறிக்கும். 224 பலகை அமைப்புகள் 224 உலகங்களை குறிக்கும். 64 சந்தன கை மரங்கள் ஆயகலைகள் 64ஐ குறிக்கும். சதாசிவ பீட 4 தங்க தூண்களும் 4 வேதங்களை குறிக்கும். அடுத்து சதாசிவ பீட 6 தங்க தூண்களும் 6 சாஸ்திரங்களை குறிக்கும். ருத்ரபீட 28 மரத்தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும். ருத்ரபீட ரகசியம் பார்த்திடும் 96 ஜன்னல்கள் 96 தத்துவங்களை குறிக்கும்.
ஐந்து படிகள்
விஷ்ணு பீடத்தின் கதவுகள் அவித்தையையும், ரகசியத் திரை மாயையும் குறிக்கும். ஐந்து தூண்களும் ஐம்பொறிகளை குறிக்கும். இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்து படிகள் இருக்கின்றன. இவற்றிற்கு பஞ்சாட்சரபடிகள் என்று பெயர். இப்படிகள் இருபுறமும் யானை உருவங்கள் இருக்கின்றன. இங்கு நடராஜப் பெருமானின் திருமுடியிலுள்ள சந்திரனில் இருந்து உண்டான ஸ்படிகலிங்கமும், மாணிக்க மயமான ரத்தின சபாபதியும், சுவர்ண ஆகர்ஷண பைரவரும், நித்ய உத்ஸவர் முதலானவர்களும் எழுந்தருளியிருக்கின்றனர்.
சித்சபையில் நிகழும் ஆனந்த நடனத்தை சிவகாம சுந்தரியார் இடைவிடாமல் கண்டுகளிப்பது, ஆன்மாக்களின் பிறவிப்பிணியைப் போக்குவதற்கே என்று குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ளார். ஆடல்வல்லான் ஆடல்புரியும் இடம் சிற்றம்பலம் இதையே தான் சித்சபை என்று அழைக்கப்படுகிறது. நடராஜர் இச்சபையில் திருநடனம் புரிந்து ஐந்து தொழில்களையும் நிகழ்த்துகிறார்.
சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது பொன்னம்பலம் என்ற கனகசபை. நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடக்கும் இடம் இதுவேயாகும். பொன்னம்பலத்தின் முகப்பை ஆதித்த சோழன் கொங்கு நாட்டிலிருந்து கொண்டு வந்த மாற்றுயர்ந்த பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழார் சுவாமிகள் கூறியுள்ளார். கனகசபையின் 18 தூண்டுகள் 18 புராணங்களை குறிக்கிறது. கனகசபையின் ஐந்து தளவரிசைக் கற்கள் பஞ்சபூதங்களின் தத்துவத்தை குறிக்கும். கனகசபையில் நின்றுதான் சிதம்பர ரகசியத்தை பக்தர்கள் தரிசிப்பார்கள். மேலும் ஆடல் வல்லானின் ஆட்டத்தை கனக சபையின் மூலமே தரிசிக்க முடியும். இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி ஆறுகால பூஜையும், பகல் இரண்டாம் காலத்தில் ரத்தின சபாபதிக்கு அபிஷேக வழிபாடுகளும் நடைபெறும்.