நாகர்கோவில் காசி வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள் என்ன?
கட்டுரை தகவல்
எழுதியவர்,விஜயானந்த் ஆறுமுகம்
பதவி,செய்தியாளர், தமிழ்
பிரசுரிக்கப்பட்டது
15 ஜூலை 2026
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பல லட்சம் ரூபாயைப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நாகர்கோவிலைச் சேர்ந்த டி.காசி என்கிற சுஜிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
டிஜிட்டல் உலகில் தங்கள் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் இளம்பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீதிபதிகள் தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி என்கிற சுஜி, சமூக ஊடகங்கள் மூலமாக பல்வேறு பெண்களிடம் பழகி அவர்களை வீடியோ, புகைப்படங்கள் எடுத்ததாக புகார் கூறப்பட்டது.
இந்தப் படங்களையும் வீடியோ காட்சிகளையும் காட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இதில் காசியால் பாதிக்கப்பட்டதாகக் கூறி 2020 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் புகார் அளித்தார்.
கன்னியாகுமாரி மாவட்ட எஸ்.பிக்கு மின்னஞ்சல் மூலமாக அவர் புகார் மனுவை அனுப்பியிருந்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய நாகர்கோவில் கோட்டார் காவல்நிலைய போலீசார், காசி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
காவல்துறையின் விசாரணையில் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் அவர் இத்தகைய மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிரட்டப்படுவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
காசி மீது ஏழு வழக்குகள்
காசியால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கந்துவட்டி, பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியது, வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியது உள்பட ஏழு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் காசி கைது செய்யப்பட்டார்.
காசி தொடர்புடைய அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். அவர் ஓராண்டு சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியில் வந்தார்.
வழக்கு தொடர்பாக காசியின் நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ் கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காசி பயன்படுத்திய மடிக்கணினி, ஸ்மார்ட்ஃபோன் ஆகியவற்றை காவல்துறை ஆராய்ந்தது.